Thursday, October 11, 2012

நீ தானே என் பொன் வசந்தம்...

இரவில்,
தூங்க போகும் முன்,
ஒரு குழந்தைப்போல்,
நீ கதை கேட்டால்,
உனக்கு சொல்லவே,
ஒரு கதை....



ஒன்றாம் வகுப்பிலே ஆரம்பித்த,
என் காதல் கதை...
அவளுடன் தான்,
என் முதல் காதல்...

உனக்கு முன்னே,
என் வாழ்வில் வந்தவளை,
ஒரு நள்ளிரவில் சந்தித்தேன்..


பெண்ணொருத்தி,
தன் தோழிகளை சூழச்செய்து
கதைத்துக் கொண்டிருந்தாள்..
அவள் தான்,
என் தேவதையென,
காதலில் விழுந்தேன்..

பூமியோ சூரியனுக்காக காத்திருந்தது..
நானோ அவளுக்காக காத்திருந்தேன்..
அன்று முதல்,
இரவானால்..

நான்,
அவளுக்கான கவிதைகளை,
பூத்தாலும்,
உதிர்த்தாலும்..
அவள் சூடுவதுமில்லை!!
சுடுவதுமில்லை..



இருந்தாலும்,
இயற்கைக்கு சொந்தமானவளை காதலித்தேன்..
காதலுக்குத்தான் கண்ணில்லையே!

இயற்கைக்கு புறம்பான என் காதல்..
தோல்வியில் முடிந்தது..
ஒரு தலைக்காதல் ஆயிற்றே!!

நீ அவளைப் பார்க்க ஆசைப்பட்டால்,
உன் கைபிடித்து,
அழைத்து போய்,
வானத்தில் தேடினேன்..



நட்சத்திரங்களுக்கு நடுவில்,
வெள்ளை தேவதையாய்,
வீற்றிருந்து நிலாவைப் பார்த்து,
புரிந்து கொண்டவளாய்,
புன்னகைத்து கட்டி அணைத்தாய்..

புரிந்தது..
நீ நிலாவிலிருந்து வந்தவள் என்றும்..
நீ தானே என் பொன் வசந்தம் என்றும்..


Download As PDF